நண்பர்களே !மாதம் 9ஆயிரம் சம்பாதிக்கலாம் ஈஸியா

Friday, January 18, 2013

சீர்காழியில் மாமனாரை கோடாரியால் வெட்டிக் கொன்ற மருமகன்: தடுத்த மனைவியையும் கொன்றார்

சீர்காழி, ஜன. 12- நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நீடூர் ரெயிலடி தெருவைச் சேர்ந்தவர் அப்துல் கரீம். இவரது மகன் மன்சூர் அலிகான் (36). இவர் சீர்காழி அருகே உள்ள நெப்பத்தூர் நெம்மேலி கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் மகள் ராஜலட்சுமியை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆசிகாபானு (3) என்ற மகளும் அசிகன் (2) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளை மாமனார் வீட்டில் விட்டு விட்டு கடந்த 2 வருடத்திற்கு முன் மன்சூர் அலிகான் வெளி நாட்டிற்கு வேலைக்கு சென்றார். அங்கு சம்பாதித்த பணத்தை மனைவிக்கு அனுப்பி வைத்தார். கடந்த 15 நாட்களுக்கு முன் மன்சூர் அலிகான் ஊர் திரும்பினார். மாமனார் வீட்டிலே தங்கி இருந்தார். நேற்று பணம் கொடுக்கல்- வாங்கல் தொடர்பாக மன்சூர் அலிகானுக்கும் அவரது மாமனார் கலிய பெருமாளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வெளிநாட்டில் சம்பாதித்து அனுப்பிய பணத்தை மனைவி மற்றும் மாமனார் முறையாக செலவு செய்யவில்லை என மன்சூர் அலிகான் குற்றம்சாட்டினார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மன்சூர் அலிகான் இன்று அதிகாலை தூங்கி கொண்டிருந்த மாமனார் கலிய பெருமாளை கோடாரியால் சரமாரி வெட்டினார். இதனை ராஜலட்சுமி தடுக்க முயன்றார். அவருக்கும் கோடாரி வெட்டு விழுந்தது. கோடாரி வெட்டில் பலத்த காயம் அடைந்த கலிய பெருமாள் சம்பவ இடத்திலே இறந்தார். படுகாயம் அடைந்த ராஜலட்சுமி சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிறிது நேரத்தில் அவரும் இறந்தார். இதுகுறித்து திருவெண்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் கார்த்திகை சாமி, சீர்காழி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட கலியபெருமாள் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்வி வைத்தனர். மாமனார்- மனைவியை வெட்டி கொன்ற மன்சூர் அலிகான் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள். இந்த இரட்டை கொலை சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Thursday, August 23, 2012

ஈவ் டீசிங் செய்தால் கடும் நடவடிக்கை: சீர்காழி டி.எஸ்.பி. எச்சரிக்கை

சீர்காழியில் விவேகானந்தா மகளிர் கல்லூரியில் சீர்காழி காவல்துறை சார்பில் ராகிங்கை முற்றிலும் ஒழிக்கும் வகையில் புகார் பெட்டிகள் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
 
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். டி.எஸ்பி பாலகுரு,மகளிர் இன்ஸ்பெக்டர் சுகுணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் ஜெயந்தி கிருஷ்ணா வரவேற்று பேசினார். இதில் சீர்காழி டி.எஸ்.பி பாலகுரு புகார் பெட்டியை பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பேசியதாவது:-
 
இங்கு வைக்கப்படுள்ள புகார் பெட்டியை கல்லூரி மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.மாணவிகள் கல்லூரிக்கு வரும்போதோ அல்லது பஸ் நிலையத்திலோ, வீட்டுக்கு அருகாமையிலோ எதாவது அநீதி இழைக்கப்பட்டாலோ அல்லது ஆண்கள் கிண்டல், கேலி செய்து தொந்தரவு செய்தால் இந்த புகார் பெட்டியில் எழுதி போடலாம். புகார் தெரிவிப்பவர்கள் தாங்கள் விருப்பப்பட்டால் பெயர், முகவரியை புகாரில் தெரிவிக்கலாம்.
 
தாழ்வு மனப்பான்மையை விட்டு பெண்கள் தைரியமாக பேச முன் வரவேண்டும். இந்திய தண்டனை சட்டத்தில் 511 பிரிவுகள் உள்ளன.எல்லா குற்ற நடவடிக்கைக்கும் தண்டனைகள் உண்டு. ஈவ்டீசிங் செய்பவர்களுக்கு 3முதல் 5 ஆண்டுகள் வரை அபராதத்துடன் கடுங்காவல் தண்டனை வழங்க சட்டத்தில் உள்ளது.ஆகையால் ராகிங்,டீசிங் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
 
இவ்வாறு அவர் பேசினார்.
 
இதில் கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

சீர்காழியில் கட்டி முடிக்கப்பட்ட தமிழிசை மூவர் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படுமா?

சீர்காழியில் பிறந்து வளர்ந்து உலகெங்கும் தமிழிசையை வளர்த்த தமிழிசை மூவர்களான முத்துதாண்டவர், அருணாச்சலகவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகியோரின் நினைவுகளை போற்றும் வகையில் சீர்காழி தாசில்தார் அலுவலகம் எதிரில் ரூ 1 கோடியே 51 லட்சம் செலவில் மணிமண்டபம் கட்ட கடந்த ஆட்சியில் உத்தரவிடப்பட்டு 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மணிமண்டபம் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தது.
 
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனி கவனத்தில் வித்திட்ட இந்த மணிமண்டபத்தை அப்போதைய செய்திதுறை அமைச்சர் பரிதிஇளம்வழுதி பல்வேறு வகையான கலை யுக்திகளை கையாண்டார். அதன் தொடர்ச்சியாக மணி மண்டபத்தில் வைப்பதற்காக கலை நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்ட தமிழிசை மூவர்களான முத்துதாண்டவர், அருணாச்சலகவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகியோரின் ஐம்பொன் சிலைகள் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டது.
 
ஒவ்வொரு சிலையும் 500 கிலோ எடையில் பீடம் உட்பட ஆறேமுக்கால் அடி உயரம் கொண்ட ஜம்பொன் சிலைகளால் அலங்கரிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ 21 லட்சம் ஆகும். மேலும் மணிமண்டத்தின் முகப்பில் இருபக்கங்களிலும் பெரியளவிலான இரண்டு கல் யானைகளும் அதன் மேல் பண்ணும், பரதமும், விரலியார் சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளது.
 
ஆரம்ப கால கட்டத்தில் அசுர வேகத்தில் தொடங்கிய மணிமண்டபத்தின் சிற்ப வேலைகள் சற்று தாமதமாகவே நடந்து முடிக்கப்பட்டுள்ளது என தமிழ் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். திமுக ஆட்சி காலத்திலேயே மணிமண்டபம் கட்டி திறக்கப்பட வேண்டுமென்பது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவு திட்டத்தில் ஓன்றாகும். அதன்படி சீர்காழியில் ஆண்டு தோறும் அரசு சார்பில் நடத்தப்படும் தமிழிசை மூவர் விழா கடந்த ஆண்டு புதிய மணிமண்டபத்தில் தலைசிறந்த கலைஞர்களை கொண்டு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால் இந்த மணிமண்டபம் காலதாமதாமாக பணிநிறைவு பெற்றும் திறப்பு விழா காணமுடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது தமிழ் ஆர்வலர்களை மனவேதனை அடைய செய்துள்ளது. இது குறித்து தமிழ் ஆர்வலர் ஒருவர் கூறுகையில் : உலகெங்கும் தமிழிசையை வளர்த்த முத்துதாண்டவர், அருணாச்சலகவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகிய தமிழிசை மூவர்களுக்கு மணிமண்டபம் மாளிகை கட்டி திறப்பு விழா செய்யாமல் இருப்பது வருந்ததக்க விஷயமாகும்.
 
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பல்வேறு இன்னல்கள் பட்டு தமிழிசையை வளர்த்த மூவர்களுக்கும் மணிமண்டபம் அவசியமான ஓன்று. அவர்களின் நினைவு களை இந்த மண்டபத்தில் ஆண்டுதோறும் போற்றிப் பாடி உலகலவில் உயர்த்திட நாம் ஓற்றுமையுடன் இணைந்து செயலாற்றிட வேண்டும். தமிழக முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் சென்னை கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலையை புதுப்பித்து சலவை கற்கள் அமைத்து சீரமைக்கவும், கன்னியாகுமரியில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தை புனரமைக்கவும் பல லட்சம் நிதி ஓதுக்கீடு செய்துள்ளார்.
 
இதேபோல் சீர்காழியில் ரூ 1 கோடியே 51 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட தமிழிசை மூவர் மணிமண்டபத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றார்.

Wednesday, July 25, 2012

சவாரி பிடிப்பதில் தகராறு: ஆட்டோ டிரைவர் அடித்துக் கொலை

சீர்காழி, ஜுலை. 23-

சீர்காழி அருகே உள்ள இரணியன் நகரில் வசித்தவர் சீனிவாசன் (40). சீர்காழி மாரியம்மன் கோவில் தோப்புத் தெருவைச் சேர்ந்தவர் சிவாஜி ராவ். இருவரும் ஆட்டோ டிரைவர்கள். கொள்ளிடம் முக்கூட்டில் உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோ ஓட்டி வந்தனர்.

சீனிவாசன் ஏற்கனவே நெஞ்சு வலி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று சீனிவாசனுக்கும், சிவாஜிராவிற்கும் சீர்காழி ரெயில் நிலையத்தில் சவாரி பிடிப்பது சம்பந்தமாக மோதல் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த சிவாஜி ராவ், சீனிவாசனை நெஞ்சில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் வலியோடு சீனிவாசன் வீட்டிற்கு சென்றார். தனது மனைவி கவிதாவிடம் நடந்த சம்பவம் குறித்து கூறினார். வீட்டிற்கு சென்ற சீனிவாசனுக்கு நெஞ்சு வலி அதிகரித்ததை தொடர்ந்து சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சீனிவாசன் மனைவி கவிதா சீர்காழி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் - இன்ஸ்பெக்டர்கள் பன்னீர் செல்வம், சுரேஷ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் சிவாஜிராவை கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட சீனிவாசனுக்கு விஷ்வா (9), நிதிஷ்குமார் (7) ஆகிய 2 ஆண் குழந்தைகள் உள்ளன.

சீர்காழியில் சீட்டு கம்பெனி நடத்தி ரூ.15 கோடி மோசடி

சீர்காழி,ஜூலை.21-
 
சீர்காழி தென்பாதி வி.என்.எஸ் நகரில் வசித்து வருபவர் நந்தக்குமார் (வயது 55), தேர் வடக்கு வீதியை சேர்ந்தவர் முரளிக்கிருஷ்ணன் ஆகிய இருவரும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சீர்காழியில் கனகதாரா சிட்பண்ட் என்ற பெயரில் சீட்டு கம்பெனி நடத்தி வந்தனர்.
 
இந்தநிலையில் திடீரென அவர்கள் தலைமறைவாகி விட்டனர். இதனால் பணம் கட்டியவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் சீர்காழி போலீசில் புகார் கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
 
கனகதாரா சிட்பண்ட் நிறுவனத்தில் சீர்காழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் சேமிப்பு முதலீடு, ஏலச்சீட்டு, ஆகியவற்றில் சேர்ந்து பணம் செலுத்தி வந்தோம். இந்நிலையில் கடந்த இரண்டு மாதமாக ஏலச்சீட்டு முடிந்தவர்களுக்கும், வைப்பு தொகை கொடுத்தவர்களுக்கும் பணம் தராமல் அலைகழிக்கப்பட்டனர்.
 
பணம் கொடுக்குமாறும் பலமுறை கேட்டும் ஏமாற்றமாட்டோம் பணத்தை கொடுத்து விடுகிறோம் என்று கூறினர்.தொடர்ந்து பாதிக்கப்பட்ட நாங்கள் பணம் கேட்கும் போது எங்களது அசையும், அசையா சொத்துக்களை விற்று அனைவருக்கும் பணம் தந்து விடுவதாக சொல்லி இதுவரை பணம் பட்டுவாடா செய்யவில்லை.
 
இந்நிலையில் கடந்த ஒருவார காலமாக மேற்படி சீட்டு நடத்தி வந்த இருவரும் குடும்பத்துடன் தலைமறைவாக உள்ளனர். தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது இரண்டு நாட்களின் வந்து விடுவோம் என்று கூறி பலரிடமும் வாங்கிய பல லட்சம் வழங்காமல் எங்களை ஏமாற்றி கொண்டிருக்கின்றனர்.
 
இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இவ்வாறு அந்த புகார் மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
புகாரை பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் விசாரணை மேற்கொள்வதாக தெரிவித்தனர். இதனால் மேற்படி சீட்டு கம்பெனியில் பணம் செலுத்தியவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 
இந்த சீட்டு கம்பெனி மோசடியில் வியாபாரிகள், வக்கீல்கள், மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்பட பலர் பணம் கட்டி பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் ரூ.15 கோடி வரை மோசடி நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் சீர்காழியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சீட்டு கம்பெனியில் பணம் கட்டி ஏமாந்த சீர்காழி தக்காஸ் பகுதியை சேர்ந்த வரதராஜன் கூறியதாவது:-
 
கடந்த 20 ஆண்டுகளாக இந்த சீட்டு கம்பெனி இயங்கி வருகிறது. ஆரம்ப காலத்தில் பணம் கட்டியவர்களுக்கு சரியான முறையில் வட்டி கொடுத்தனர். இதனை நம்பி ஏராளமானோர் பணம் கட்ட தொடங்கினார்கள். டாக்டர்கள், தொழில் அதிபர்கள், வர்த்தகர்கள் என முக்கிய பிரமுகர்களும் இங்கு பணம் கட்டி உள்ளனர்.
 
நான் கடந்த 2010 - ம் ஆண்டு முதல் பணம் கட்டி உள்ளேன். ரூ. 1 லட்சத்து 97 ஆயிரம் வரை பணம் கட்டி உள்ளேன். இது குறித்து சீட்டு கம்பெனி உரிமையாளர்களிடம் கேட்ட போது தனியார் கல்லூரியில் முதலீடு செய்துள்ளோம்.தியேட்டர் உள்ளது. பஸ் உள்ளது. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறோம்.பணத்தை சரி செய்து விடுவோம் என கூறினார்கள். பணம் கிடைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
சீர்காழி சீட்டு கம்பெனியில் முக்கிய பிரமுகர்கள் ரூ. 20 லட்சம் முதல் 30 லட்சம் வரை முதலீடு செய்துள்ளனர். அவர்கள் புகார் கொடுக்க பயப்படுகிறார்கள். வருமான வரித்துரை அதிகாரிகளுக்கு பயந்து அவர்கள் புகார் கொடுக்க மறுப்பதாக கூறப்படுகிறது.

Wednesday, July 18, 2012

ரெட்டிக்கோடங்குடி-காடாக்குடி ஆற்றின் குறுக்கே புதிய பாலம்: சக்தி எம்.எல்.ஏ. பார்வையிட்டார்

வைத்தீஸ்வரன்கோவில் அருகே புங்கனூர் பஞ்சாயத்தில் ரெட்டிக்கோடங்குடி கிராமம் உள்ளது. இங்குள்ள ஊராட்சி ஓன்றிய தொடக்கப்பள்ளியில் அதிகபட்சமாக 15 மாணவர்கள் படித்து வருகின்றனர். ஏனெனில் ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வந்தனர்.
 
இதனால் அருகில் உள்ள கிராமமான காடாக்குடியில் இருந்து சுமார் 3 கி.மீ. தூரம் சுற்றி கொண்டு மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டியுள்ளதால் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவிட்டது. மேலும் 2 கி.மீ தூரத்தில் உள்ள புங்கனூர் பள்ளிக்கு சென்று மாணவர்கள் படித்து வருகின்றனர். இதனிடையே ரெட்டிக்கோடங்குடி - காடாக்குடி இடையே பாப்பான்ஓடை ஆற்றின் குறுக்கே புதிய பாலம் அமைத்துக் கொடுத்தால் மாணவர்கள் குறைந்த தூரத்தில் வெகு சீக்கிரமாக பள்ளியை சென்றடைவார்கள்.
 
எனவே ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்ட வேண்டுமென சீர்காழி தொகுதி எம்.எல்.ஏ. சக்தியிடம் கோரிக்கை விடுத்தனர்.  இதனையடுத்து சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த சக்தி எம்.எல்.ஏ. ரெட்டிக்கோடங்குடி - காடாக்குடி இடையே புதிய பாலம் கட்டுவதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பி வைக்குமாறு யூனியன் பொறியாளரிடம் கேட்டுக் கொண்டார். விரைவில் மாணவர்களின் நலன் கருதி பாலம் கட்டப்படும் என தெரிவித்தார்.
 
மாவட்ட ஊராட்சி தலைவர் சந்திரசேகரன், ஊராட்சிமன்ற தலைவர் மகேந்திரன், கட்சி நிர்வாகிகள் ராஜு, பாலமுருகன், ஓப்பந்தக்காரர் இளையநாதன் உடனிருந்தனர்.

சாராய வேட்டையின் போது கார் மோதி போலீஸ் ஏட்டு பலி


சீர்காழி அருகே உள்ள பாகசாலை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வந்தவர் ரவிச்சந்திரன் (40). மேலும் நடமாடும் மதுவிலக்கு சிறப்பு தனிப்படையிலும் இருந்து வந்தார்.
கடந்த 6 -ந்தேதி அதிகாலை கூத்தியம் பேட்டையில் சாராயம் கடத்தலை தடுக்க சிறப்பு தனிப்படை சப் -இன்ஸ்பெக்டர் சிங்காரம் தலைமையில் தனிப்படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.
இதில் ஏட்டு ரவிச்சந்திரனும் இடம் பெற்று இருந்தார். அப்போது புத்தூரில் இருந்து பழையாறு நோக்கி வந்த அம்பாசிடர் காரை நிறுத்த முயன்றனர்.
ஆனால் அந்த கார் ஏட்டு ரவிச்சந்திரன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
கார் மோதியதில் ரவிச்சந்திரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடல் நிலை மோசமானதை தொடர்ந்து தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்றிரவு 11. 30 மணிக்கு ரவிச்சந்திரன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கார் மோதி பலியான ஏட்டு ரவிச்சந்திரன் கடந்த 95 -ம் ஆண்டு போலீஸ் வேலையில் சேர்ந்தார். நாகை ஆயுதப்படையில் பணியாற்றினார். பின்னர் பாக சாலை போலீஸ் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டார்.
இவர் குடும்பத்துடன் மயிலாடுதுறை அப்துல் காதர் நகரில் வசித்து வந்தார்.
இவரது மனைவி பெயர் எழிலரசி. இவர்களுக்கு தீபிகா என்ற மகளும் ஜெனதீஸ்வரன் என்ற மகனும் உள்ளனர். அவர்கள் ரவிச்சந்திரன் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.