நண்பர்களே !மாதம் 9ஆயிரம் சம்பாதிக்கலாம் ஈஸியா

Monday, April 16, 2012

மீன்பிடி தடை காலத்தால் வெறிச்சோடிய கடற்கரை: மீன்கள் விலை அதிகரிக்கும் அபாயம்

நாகை, ஏப். 15-    
நாகை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை, பூம்புகார், புதுப்பட்டினம், நாகை, கோடியக்கரை, வேதாரண்யம் மற்றும் அதனை சுற்றியுள்ள கடற்கரை கிராமங்களில் மீன்பிடி தொழிலே முக்கியமானதாக உள்ளது.
எனவே இந்த பகுதியில் இருந்து தினந்தோறும் 2000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு சென்று வருகின்றன. மீன்களின் இனப்பெருக்ககால சமயத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல் 14-ந்தேதி முதல் மே 29-ந்தேதி வரை கடலில் மீன் பிடிப்புக்கான தடை காலம் அமல்படுத்தப்படுகிறது.  
அதன்படி நேற்று நள்ளிரவு முதல் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் அமலுக்கு வந்தது. எனவே படகுகள் அனைத்தும் கடற்கரையில் நிறுத்தப்பட்டன. மீனவர்கள் அனைவரும் வலைகளை பழுது பார்க்கும் பணியினை தொடங்கி உள்ளனர்.
மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடற்கரை முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. நாகை மாவட்டத்தில் மீன்பிடி தொழிலை நம்பி மீன் விற்பனையாளர்கள், ஐஸ்கட்டி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதி பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
அவர்கள் தடை காலத்தையொட்டி சொந்த ஊருக்கு சென்றனர்.   விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலில் வஞ்சிரம், சீலா, கடல் விரால், வாவல், தக்காளி இரால், திருக்கை மீன்கள் கிடைக்கும். தற்போது இந்த வகை மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். இதனால் மீன்கள் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் நாட்டுப்படகுகள், நூலிழை படகுகள் மூலமாக மீன்பிடி தொழில் நடைபெறும். இந்த படகுகள் மூலம் குறைந்த அளவு மீன்களே கிடைக்கும். இருப்பினும் அதிகளவில் மீன்களை கொண்டுவரும் விசைப்படகு மீன்பிடி இல்லாததால் ஜூன் 2-ந்தேதி வரை மீன்களின் விலை கடுமையாக உயரும் வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையே மீன்பிடி தடைகால நிவாரணமாக அரசு தலா ரூ.4 ஆயிரம் வழங்கவேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.